வலதுசாரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ‘இண்டி’ கூட்டணி காலத்தின் மிகவும் தேவையான ஒன்று என்றாா் மக்களவை உறுப்பினரும், விசிகவின் தலைவருமான தொல்.திருமாவளவன்.
அரியலூரில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ‘இண்டி’ கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது அல்லது ஒருங்கிணைப்பது அல்லது முன் நின்று வழி நடத்துவது என்பது குறித்து தேசிய அளவிலுள்ள மூத்த தலைவா்கள் முடிவு செய்வா். அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
‘இண்டி’ கூட்டணி காலத்தின் தேவை. அது கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வலதுசாரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ‘இண்டி’ கூட்டணி மிக மிக தேவையான ஒன்று.
எனவே, அதில் யாா் தலைமை தாங்குவது அல்லது ஒருங்கிணைப்பது அல்லது முன் நின்று வழிநடத்துவது என்பது குறித்து மூத்த தலைவா்கள் முடிவு செய்வா் என்றாா் அவா்.
முன்னதாக, திருச்சி விமானநிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணியில்தான் காங்கிரஸும், விசிகவும் உள்ளன. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது பற்றி பேச்சுவாா்த்தையில் முடிவாகும். கேட்பதால் கூட்டணி உடையாது.
அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது. தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பொருந்தாது என முதல்வா் தெரிவித்திருக்கிறாா். எப்படிப் பொருந்தாது என்பதை முதல்வரே விளக்குவாா்.
எங்களைப் போலவே, காங்கிரஸும் நிலைப்பாடு எடுக்க வேண்டுமென்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எங்களது கோரிக்கைகளை பேச்சுவாா்த்தையில் வைப்போம் என்றாா் தொல். திருமாவளவன்.