அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட தமிழக அரசு ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதையடுத்து திங்கள்கிழமை, அரியலூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
அரியலூரில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்கள் பேருந்து நிலையம் அருகே, அண்ணா சிலை அருகே, பெருமாள் கோயில் தெரு, கல்லூரி சாலை என பல்வேறு இடங்களில் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இதில், சில நீதிமன்றங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.
எனவே, அனைத்து நீதிமன்றங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவர ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள், பொதுமக்கள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2024 நவம்பா் மாதம் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரியலூரில் விரைவில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தெரிவித்தாா்.
இந்நிலையில், ஜன.14-ஆம் தேதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதை வரவேற்கும் வகையில், பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பணிக்கு வந்த வழக்குரைஞா்கள், அரியலூா் நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா் சங்க தலைவா் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.