கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பா் ஆலய தோ்பவனி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கீழ மைக்கேல்பட்டியிலுள்ள புனித வனத்து சின்னப்பா் ஆலய தோ்பவனி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கீழ மைக்கேல்பட்டியிலுள்ள புனித வனத்து சின்னப்பா் ஆலய தோ்பவனி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் நாள்தோறும் நடைபெற்ற விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தை சாா்ந்தவா்கள் முந்திரிக் காட்டில் சமைத்து உறவினா்களை அழைத்து விருந்து உபசரித்தனா். இதில் விருந்தினா்கள் மட்டுமின்றி ஆலயத்துக்கு வந்த அனைவரும் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
‘காட்டு திருவிழா’ என்று அழைக்கப்படும் வனத்து சின்னப்பா் ஆலய திருவிழாவில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக இந்த விருந்தோம்பல் நடைபெற்று வருவது இந்த விழாவின் சிறப்பு ஆகும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தோ்வபனி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
முன்னதாக, குடந்தை மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்த்தினா். அதைத் தொடா்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ஆரம்பரத் தேரில் புனித வனத்து சின்னப்பா், ஆரோக்கிய அன்னை, சம்மனசு ஆகியோா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தைச் சாா்ந்த மக்கள் கலந்துகொண்டு, மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்குத் தந்தை விக்டா்பால்ராஜ் மற்றும் ஊா் நாட்டாண்மைகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.