கரூர் மாவட்டம், தென்னிலை அருகே சனிக்கிழமை இரவு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (42). இவர், தனது மனைவி செல்வி (38), மகள் மேகலா (19), மகன் மோகன்குமார், மைத்துனர் ரமேஷ் ஆகியோருடன் காரில் சனிக்கிழமை தென்னிலை வழியாக கொடுமுடி கோயிலுக்குச் சென்றார்.
அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அன்று இரவு 11 மணிக்கு தென்னிலை வழியாக மீண்டும் கோவைக்குச் சென்றார். அப்போது, இந்த காரும், கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்த காரும் தென்னிலை அடுத்த நல்லியபாளையம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், தங்கபாண்டியன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தென்னிலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.