கொளந்தாகவுண்டனூரில் அரசு மதுக்கடை முன் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பசுபதிபாளையம் கொளந்தாகவுண்டனூரில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அதிகாலை 6 மணி முதல் மதுவிற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாஜக இளைஞரணியின் நிர்வாகி கௌதமன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீஸார் அவர்களிடம், போலீஸாரின் அனுமதி பெற்றுத்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் எனக்கூறினர். மேலும் அரசு மதுக்கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.