தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் கொளந்தானூரைச் சேர்ந்தவர் ரவி (44). இவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தும் கூடம் நடத்தி வருகிறார். இவரிடம் கரூர் கோட்டையண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் மதன் குமார் (21), ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் விக்னேஷ் (21) ஆகியோர் கடந்த மாதம் 27 ஆம் தேதி கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் பசுபதிபாளையம் போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் இருவரும், பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் செயின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, போலீஸார் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.