இல்லம்தோறும் திருக்குறள் நூல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கருவூர் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் நாள் விழா கரூர் ஜவஹர் பஜாரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் வரவேற்றார். தலைவர் ப.தங்கராசு திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்களை புரவலர் பழ.ஈஸ்வரமூர்த்தி வழங்கினார்.
விழாவில் "வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்குவோம்' என்ற தலைப்பில் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் பேசியது:
தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் திருக்குறள் நூல் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும்போதுதான் எதிர்கால சந்ததியினரும் வள்ளுவத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து அவர்கள் நல்வழியில் வாழ்க்கையை நடத்தும் போது இந்தியா விரைவில் வல்லரசாக மாறும். அனைவரிடத்திலும் மனித மாண்பு தலைத்தோங்கும் என்றார்.
விழாவில், திருக்குறள் பரப்பும் பணிக்காக தமிழன் குமாரசாமி எசுதர், கவிஞர் நன்செய்புகழூர் அழகரசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். இதில் புலவர் பார்த்தசாரதி, அரிமா சேதுகுமார், அனந்தநாராயணன், கார்த்திகேயன், பா.பாலசுப்ரமணியன், கருவைவேணு, கருவை குழந்தை கவிஞர் சண்முகசிதம்பரம், தென்னிலை கோவிந்தன், நீலவர்ணன், அபிராமி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கரூரில் திருவள்ளுவர் சிலை விரைவில் நிறுவுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.