திமுகவுடன் கூட்டணி தொடரும்
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
மோடி பிரதமராகிய 4 வருடங்களில் தமிழகத்திற்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்துள்ளாரா? ஒரு கோடி பேர் வேலையில்லாமல் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்துகொண்டு திட்டங்களைச் கொண்டுவராமல்
முன்னாள் அரசை குறைகூறியே காலம் தள்ள நினைப்பது அவர்கள் தப்பிக்கக் கூடியதற்கான யுக்தி. பொன்.ராதாகிருஷ்ணன்தான் தமிழகத்திற்கு அமித் ஷா வருகிறார் என அடிக்கடி கூறுகிறார். தமிழகத்திற்கு அமித் ஷா, மோடி என பலர் பல முறை வந்துள்ளனர். என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வரவில்லை. இந்தியாவில் 100 ஹிட்லர்கள் கொண்ட ஆட்சி நடப்பதாக மம்தா பானர்ஜி கூறியிருப்பது உண்மைதான். ஒரே தேர்தல் வந்தால் தங்களால் வரமுடியாது என்ற பயத்தில்தான் அதிமுக அதை எதிர்க்கிறது. வரும் தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி, அரசியல் விமர்சகர்கள் பேசினால் வழக்கு போடுகிறார்கள். இந்த அரசாங்கம் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் அரசாக, பத்திரிகை தர்மம், சுதந்திரத்தை நெரிக்கும் அரசாக, ஒரு பாசிச அரசாக செயல்படுகிறது என்பதையே இதுபோன்ற வழக்குகள், கைதுகள் காட்டுகிறது. இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என்றார் அவர்.
பேட்டியின்போது மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்டத் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.