குளித்தலையில் அய்யாக்கண்ணு குழுவினருடன் பாஜகவினர் வாக்குவாதம்
கரூர் மாவட்டம், குளித்தலையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்த விவசாயி அய்யாக்கண்ணுவுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்த விவசாயி அய்யாக்கண்ணுவுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் இணைந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை அளித்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கிய இந்தக் குழுவினர் 10 ஆவது மாவட்டமாக கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
குளித்தலை காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை அய்யாக்கண்ணு குழுவினர்
வழங்கினர். பின்னர் குளித்தலை பெரியபாலம் பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கச் சென்றபோது, அங்கு வந்த பாஜக நகரத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றியத் தலைவர் வீரமணி, ஒன்றிய இளைஞரணித் தலைவர் குமரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அய்யாக்கண்ணுவிடம் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.