கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் சார்பில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆபிசர்ஸ் கிளப் அரங்கில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது. 10, 13, 15, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கு ஒரு பிரிவிலும், வயது வரம்பில்லாதவர்களுக்கான ஓபன் பிரிவிலும் போட்டிகள் நடந்தன.
இதில் கரூர் மாவட்டத்ததைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், சங்கச் செயலாளர் அருண் வரவேற்றார்.
சங்கத் தலைவர் விசா ம.சண்முகம் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளர் பிஜூகுமார், டி.என்.பி.எல். முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன், ஆசியன் பேப்ரிக்ஸ் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.