ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கும் நிதியுதவியை பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளிலுள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத் தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் 2019, அக். முதல் 2020 மார்ச் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன், அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை , கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.