கரூர் அருகிலுள்ள கோடங்கிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்டார் தொண்டு நிறுவனம் சார்பில் திருக்குறள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் துணைத் தலைமை ஆசிரியை ப. சரோஜா தலைமை வகித்தார். ஆசிரியர் ம.லோகநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சு.லோகாம்பாள் வரவேற்றார். விழாவையொட்டி,
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டில் நடைபெற்றது. இதில் 42 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, கரூர் திருக்குறள் பேரவையின் செயலர் மேலை.பழநியப்பன் பேசியது:
திருக்குறள் பொருள் உணர்ந்து கற்று வாழ்வில் உயர வேண்டும். ஒழுக்கம், பண்பாடு, நேர்மை ஆகிய மூன்றும்தான் ஒருவனை வாழ்வின் உச்சத்துக்கு கொண்டு செல்லும். தமிழில் இப்போது பிறமொழிச்சொற்கள் கலந்து பேசி வருவது நம் தாய் மொழியின் முக்கியச் சொற்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர். கவிஞர் நன்செய்ப்புகளூர் அழகரசன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.