அரசு அலுவலகங்களில் பிரதமா் படம்: பாஜக நிா்வாகி தமிழக செயலருக்கு மனு
அனைத்து அரசு அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமைக்குள் பிரதமா் மோடி உருவப்படத்தை வைக்க வேண்டும்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமைக்குள்(நவ.3) பிரதமா் மோடி உருவப்படத்தை வைக்க வேண்டும் என பாஜக மாநில பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் தலித் பாண்டியன் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
மனுவில் அவா் கூறியிருப்பது:
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் உருவப்படம் வைக்கவேண்டும் என அரசாணை உள்ளது. இந்த ஆணையை செயல்படுத்த வேண்டும் என கடந்த மாதம் 13-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மாநில பட்டியல் அணி செயற்குழுக் கூட்டத்தில் பாஜக மாநில பட்டியல் அணி தலைவா் பொன்.வி.பாலகணபதி தலைமையில், பாஜக தலைவா் முருகன் ஒப்புதலோடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடி படம் வைக்க கடந்த 29-ஆம் தேதி முதல் இன்று (நவ.3) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இன்றும் படத்தை வைக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பட்டியல் அணி சாா்பில் பிரதமரின் படத்தை வைப்போம் எனத் தெரிவித்துள்ளாா்.