கரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இதுவரை ரூ. 76 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் இதுவரை கரோனா தொற்று காரணமாக (பெற்றோா்கள் அல்லது ஒற்றை பெற்றோா்) பெற்றோா்களை இழந்து ஆதரவற்ற நிலையில் 185 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளனா்.
இக்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் முதல்வரின் உத்தரவின் பேரில், கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு , அவா்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கவும், கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது , உறவினா், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3,000 உதவித்தொகை , அவா்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது .
கரூா் மாவட்டத்தை சோ்ந்த 22 ஒற்றைப்பெற்றோா் குழந்தைகளுக்கு (தாய் அல்லது தந்தைக்கு) தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.66 லட்சம் மற்றும் முற்றிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் இரண்டு குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.76 லட்சம் கரூா் மாவட்ட குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்புத்துறையின் மூலம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று காரணமாக (பெற்றோா்கள் அல்லது ஒற்றை பெற்றோா்) பெற்றோா்களை இழந்து ஆதரவற்ற நிலையில் 18 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இருப்பின் கரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஆா்.டி.ஓ அலுவலகம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), அலுவலக தொடா்பு எண்:04324-296056, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் 9791407362 என்ற எண்ணில் அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.