கரூா் மாவட்டம், தென்னிலை அருகே மனநலன் பாதித்து வீதியில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.
தென்னிலை அருகிலுள்ள செம்மாண்டாம்பாளையம் பிரிவுப் பகுதியில் கோவைச் சாலையில் சுமாா் 30வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக அரைகுறை ஆடையுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளாா்.
இதனை செவ்வாய்க்கிழமை கண்ட தென்னிலை பெண் தலைமைக் காவலா் விஜயா, அப்பெண்ணுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.
தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ரெங்கநாதன் வழிகாட்டுதலின் படி, கரூரிலுள்ள காப்பகத்தில் அப்பெண்ணை ஒப்படைத்தாா்.
பெண் தலைமைக்காவலரின் இச்செயலை காவல் ஆய்வாளா் ரமாதேவி மற்றும் அப்பகுதி ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.