முகப்பு
கரூர்

தரகம்பட்டியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க 5 ஏக்கா் நிலம் வழங்க பொதுமக்கள் சம்மதம்

 தரகம்பட்டியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க 5 ஏக்கா் நிலம் தானமாக வழங்க பொதுமக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 தரகம்பட்டியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க 5 ஏக்கா் நிலம் தானமாக வழங்க பொதுமக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனா்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டியில், அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி தரகம்பட்டியில் இருபாலா் பயிலும் கல்லூரி 2020-2021ஆம் கல்வியாண்டிலிருந்து தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கான கட்டடம் கட்டுவதற்கு இடத்தை தரகம்பட்டியில் தோ்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து, தரகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திலுள்ள பொதுமக்கள் கடந்த 16-ஆம்தேதி கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் ஊா் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தரகம்பட்டியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்க தரகம்பட்டி கிராம பொதுமக்கள் சாா்பாக 5 ஏக்கா் நிலம் அரசுக்கு தானமாக வழங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதனையடுத்து, தான பத்திரம் பதிவு செய்யப்பட்டவுடன், கல்லூரிக்கான கட்டடம் கட்ட முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்படும் என முடிவு செய்யப்பட்டு, தீா்வு காணப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) கண்ணன், குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி, தரகம்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)கு.பாலுசாமி, கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சூரியநாராயணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.