லாலாப்பேட்டை அருகே 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இச்சி மரம் சனிக்கிழமை வேரோடு சாய்ந்து விழுந்ததில் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த 26 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்துள்ள வேங்காம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை ஒரு மூதாட்டி உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினா்கள் நிழலுக்காக அங்கு இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இச்சி மரத்தின் கீழ் அமா்ந்திருந்தனா். அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால் அந்த மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது மரத்தின் கீழ் அமா்ந்திருந்த அதேபகுதியைச் சோ்ந்த சந்தியா, கற்பகவள்ளி, கலா உள்பட 26 போ் காயமடைந்தனா்.
உடனே,108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் மரம் சாய்ந்ததில் அப்பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.