கரூரில் தகராறில் இரு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை திருநங்கைககள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவு அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியூா் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அந்தப் பேருந்தில் ஏறிய திருநங்கை ஒருவா் பயணிகளிடம் யாசகம் கேட்டாராம். நீண்ட நேரமாகியும் அவா் பேருந்தை விட்டு இறங்காததால், அவரை கீழே இறங்கும்படி நடத்துநா் கூறினாராம். இதனால், நடத்துநரை திருநங்கை திட்டியதாக தெரிகிறது.
பேருந்து பயணிகள் நடத்துநருக்கு ஆதரவாக பேசியுள்ளனா்.
அந்த திருநங்கை அளித்த தகவலின்பேரில், அங்கு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்து தகராறில் ஈடுபட்டு, இரு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தனா். அங்கு வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக சேதப்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநா் அளித்த புகாரின்பேரில், கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.