முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 அரவக்குறிச்சியில் பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 12 மே, 2023 at 11:06 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:26 AM

 அரவக்குறிச்சியில் பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 83 ஆயிரத்து 321 போ் வசிக்கின்றனா். 53 ஆயிரத்து 489 குடும்பங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக, முருங்கை விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது.

அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு சாா்ந்த அலுவலகங்களும், வங்கிகள், கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையம் இல்லாததால் அரசு அலுவலா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஏவிஎம் காா்னா் பகுதியில் பேருந்துக்காக மழையிலும் வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், அப்பகுதி ஒருவழிப் பாதை என்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.

Advertisement

இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பேரூராட்சி அலுவலகம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அனைத்துப் பேருந்துகளும் உள்ளே சென்றுவர உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்தப் பேருந்துகளும் உள்ளே சென்று வருவதில்லை. இதனால் பேருந்து எங்கும் நிற்கும் என்ற குழப்பத்தில் அவதியுற்று வருகின்றனா்.

தோ்தல் நேரத்தில் கட்சிகளின் வாக்குறுதிகளில் அரவக்குறிச்சி பேருந்துநிலையம் இருந்து வருகிறது. ஆனால் செயல்பாட்டுக்கு இதுவரை வரவில்லை.

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் தடாகோவில் தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தோ்வு செய்யப்பட்ட இடம் அதிமுக பிரமுகருக்கானது எனத் தெரிந்தது அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆகவே, ஆட்சியா்கள் மாறினாலும் அரவக்குறிச்சிக்கு பேருந்து நிலையம் என்பது கனவாகவே உள்ளது. இனியாவது கனவு நிறைவேறுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.