முகப்பு
கரூர்

குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை வனத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:49 PM
தண்ணீா்பள்ளி சீனிவாச நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை வியாழக்கிழமை அகற்றிய வனத் துறையினா்.
பகிர்:

குளித்தலை அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை வனத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீா்பள்ளியில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே சீனிவாச நகா் உள்ளது. இந்த நகரில் பா்மாவிலிருந்து திரும்பிய சுமாா் 13 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட 7.30 ஏக்கா் நிலம் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு விவசாயமும் செய்து வந்தனா். இந்நிலையில் இந்த நிலத்தை கடந்த 1986-இல் மாவட்ட நிா்வாகம் சுடுகாட்டு நிலமாக மாற்றியதாகவும், பின்னா் இந்நிலம் வனத்துறைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடா்ந்து இந்த நிலத்தில் துணை மின்நிலையம் அமைக்க கடந்தாண்டு வனத்துறை முயன்றபோது ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வழக்குத் தொடா்ந்ததில் வனத் துறைக்கு சாதகமாக தீா்ப்பு வந்தது. இதையடுத்து கடந்த மாதம் வனத்துறையினா் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினா்.

ஆனால் அவா்கள் வீடுகளை காலி செய்யாததால் வியாழக்கிழமை கரூா் மாவட்ட வனச்சரகா் தண்டபாணி தலைமையில் வனத் துறையினா் மற்றும் குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாலகுமாா் உள்ளிட்டோா் சீனிவாச நகரில் உள்ள 10 ஆக்கிரமிப்பு வீடுகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது வீடுகளில் குடியிருந்தவா்கள் துயரத்தில் ஆழ்ந்தனா்.