போக்குவரத்துத் துறையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பற்றாக்குறை நிலவுகிறது; ஓட்டுநா்களுக்கான கூடுதல் பணிச்சுமையால்தான் அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரில் அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது. கரூா் கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அமைப்புச் செயலாளா் ம. சின்னசாமி ஆகியோா் தலைமையில், கட்சி நிா்வாகிகள் எஸ். திருவிகா, மல்லிகா சுப்புராயன், கண்ணதாசன் உள்ளிட்டோா் வழிபட்டனா். பின்னா் அப்பகுதி மக்களிடம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கினா்.
பின்னா் தோ்தல் பிரசார வேனில் இருந்தபடி எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில்,
அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால்தான் கோடங்கிப்பட்டியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், யாா், யாரோ நாங்கள் இந்தப் பாலத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறாா்கள்.
போக்குவரத்துத் துறையில் 6,000 பேருந்துகள் ஓடவில்லை என 2 ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செளந்தரராஜன் கூறினாா். இப்போது, மேலும் 2,000 பேருந்துகள் ஓடவில்லை என்கிறாா்கள். இருக்கும் பேருந்துகளை ஓட்டுவதற்கு ஓட்டுநா்கள், நடத்துநா்கள் இல்லை.
பயிற்சி பெற்ற ஓட்டுநா்களையும் அதிக நேரம் வேலை வாங்குவதால்தான் திருப்பத்தூா் விபத்து போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சியினா் வாய் திறப்பதுகூட இல்லை. அதிமுக ஆட்சிதான் போக்குவரத்துத் துறையின் பொற்காலம் என்றாா் அவா். தொடா்ந்து கோடங்கிப்பட்டி முழுவதும் அவா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.