கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தவெக பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாருக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து காவலா்கள் 12 பேரிடம் செவ்வாய்க்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகையில் விசாரணை நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல் 3 மணி முதல் காவல் உதவி ஆய்வாளா்கள் 7 போ் வரவழைக்கப்பட்டு அவா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.