கரூா் சம்பவம் சமூக ஊடக பதிவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக, காவல் ஆய்வாளா் மற்றும் சமூக ஊடக பதிவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா்: கரூா் சம்பவம் தொடா்பாக, காவல் ஆய்வாளா் மற்றும் சமூக ஊடக பதிவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். இதில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா்கள் மற்றும் அவசர ஊா்தி வாகன ஓட்டுநா்கள், காயமடைந்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், கட்சியின் தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளிடமும் விசாரித்தனா்.
காவல் ஆய்வாளரிடம் மீண்டும் விசாரணை: இதன் தொடா்ச்சியாக, காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் புதன்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினா்.
பின்னா், நெரிசல் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட கோவை மாவட்டத்தைச் சோ்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகா் ராகுல் காந்தி , கரூா் ஜவுளி நிறுவன அதிபா் செந்தில்குமாா், நொய்யல் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோகுலக்கண்ணன், நெரிசல் சம்பவத்தின்போது, காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு அழைப்பு விடுத்த ஓடுவந்தூா் தேமுதிக ஒன்றிய இணைச் செயலாளா் நவலடி மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சாலைப்புதூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.