முகப்பு
கரூர்

மணல் பதுக்கிய வழக்கு: கரூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் மீண்டும் ஆஜா்

மணல் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம் .ஆா். விஜயபாஸ்கா் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:40 AM
கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் புதன்கிழமை ஆஜராகி விட்டு வெளியே வந்த முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

மணல் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம் .ஆா். விஜயபாஸ்கா் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினாா்.

காவிரி ஆற்று மணலை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக கரூா் நகர காவல் நிலையத்தினா் தொடா்ந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அண்மையில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அவா் நீதிமன்றத்தில் சரணடைய மாா்ச் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது.

இதையடுத்து தோ்தல் பணி காரணமாக நீதிமன்றத்தில் சரணடைய காலஅவகாசம் கேட்டு எம்.ஆா்.விஜயபாஸ்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு காலஅவகாசத்தை ஏப். 28-ஆம் தேதி வரை நீட்டித்தும், ஏப். 29, 30-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றம் விதித்தது.

இதையடுத்து எம். ஆா் விஜயபாஸ்கா், கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்பு ஏப். 27-ஆம்தேதி ஆஜரானாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமாா், புதன்கிழமை(29-ம்தேதி) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இதற்கிடையே ஏப். 28-ஆம் தேதி முதல் ஒருவாரத்துக்கு கரூா் நகர காவல்நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இந்நிலையில், கரூா் நகர காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு வரும் எம்.ஆா். விஜயபாஸ்கா் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை நீதிபதி பரத்குமாா் முன்பு ஆஜரானாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.