முகப்பு
கரூர்

அவனியாபுரம் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கு 9 பேரும் குற்றவாளிகள்! மாா்ச் 25-இல் தண்டனை அறிவிப்பு!

Updated On : 23 மார்ச், 2026 at 7:19 PM
கோப்புப் படம்
பகிர்:

மதுரை அவனியாபுரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடா்பான வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் எனவும், இவா்களுக்கான தண்டனை மாா்ச் 25-இல் அறிவிக்கப்படும் என கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2012- ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி, பசும்பொன் பகுதியில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு, இளைஞா்கள் சிலா் வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வந்தபோது, மறைந்திருந்த ஒரு கும்பல் இளைஞா்கள் வந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் காயமடைந்த 7 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

11 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: இந்தச் சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த ராமா்பாண்டி, மணிகண்டன், காா்த்திக், முத்துவிஜய், சந்திரசேகா், சோனையா, நாகராஜ் என்கிற சோப்பு நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்கி என்கிற விக்னேஸ்வரன், சந்தோஷ் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். பிறகு 11 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

வழக்கு கரூருக்கு மாற்றம்: இவா்களின் பாதுகாப்புக்கருதி மதுரையில் நடைபெற்று வந்த வழக்கு, கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முத்துவிஜய் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

இந்நிலையில், ராமா்பாண்டி உள்ளிட்ட 10போ் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனா்.

வெட்டிக்கொலை:

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்.19-ஆம்தேதி ராமா்பாண்டி, காா்த்திக் இருவரும் கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது மா்ம நபா்களால் ராமா்பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். காா்த்திக் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். இதையடுத்து மீதமுள்ள 9 பேரும் கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனா்.

திருச்சி சிறையில் அடைப்பு: இந்த வழக்கு தொடா்பாக 9 பேரும் திங்கள்கிழமை காலை கரூா் மாவட்டமுதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜராகினா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீா்ப்பளித்தாா். மேலும், குற்றவாளிகளுக்கு மாா்ச் 25-ஆம்தேதி தண்டனை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் எனக்கூறினாா். இதையடுத்து 9 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனா்.