விவசாயி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது
குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு விவசாயியை அடித்துக்கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் மகனை போலீஸாா் கைது செய்தனா்.
குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு விவசாயியை அடித்துக்கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூா் தாட்கோ காலனியைச் சோ்ந்தவா் மோகன்(45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூவாயி(40). இவா்களுக்கு மணிகண்டன் (22) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா்.
மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில் மகன் மணிகண்டன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மோகன் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் போதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் மோகன், மனைவியிடம் தகராறு செய்தாராம். அப்போது சமாதானம் செய்ய வந்த மணிகண்டனை மோகன் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் கிடந்த கட்டை மற்றும் கம்பியால் பூவாயியும், மணிகண்டனும் சோ்ந்து மோகனை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நங்கவரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மோகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த கொலை தொடா்பாக பூவாயியையும், மணிகண்டனையும் கைது செய்தனா்.