மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல், பெரம்பலூர், கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய அரசு வட்டார மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் சங்க மாநில துணை செயலர் அர்ச்சுணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலர் ரமேஷ், பொருளாளர் அன்பரசு, மருத்துவர் ஆனந்தமூர்த்தி உள்பட 80 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்: இதேபோல, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும், ஏழை மக்களின் சுகாதாரத்தையும் உறுதிசெய்ய முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் உயர் பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், ஏற்கனவே இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும். 2017 -2018 ஆம் ஆண்டிற்கான இட ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ பட்ட படிப்பிற்கான இடங்களுக்கு நிகழாண்டு வெளியிடப்பட்ட தொகுப்பிதழில் குறிப்பிட்ட விதிகளின் படி கலந்தாய்வு நடத்த வேண்டும்.
2018- 19 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மருத்துவ பட்ட படிப்பிற்கான தேர்வை தமிழக அரசு நடத்தவும், 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பிற்கான மாணவர்கள் தேர்வு முறையை தமிழக அரசே முடிவு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 30 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த 72 மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கிராமப்புற மக்களும், நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.