பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி என். விஜயகாந்த் தலைமை வகித்தார்.
இந்த முகாமில், சிவில், கிரிமினல், ஜீவனாம்சம், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகளுக்கு வழக்குரைஞர்கள் நியமித்து, வழக்கு தொடர மற்றும் எதிர் வழக்காட, பிணையில் எடுக்க, தொழிலாளர் பிரச்னை, பெண்கள் வன்கொடுமை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழக்குரைஞர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில், சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான எம். வினோதா, வழக்குரைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் இ. வள்ளுவன் நம்பி உள்பட கிராம பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.