பெரம்பலூரில் கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அமைப்பின் வட்டத் தலைவர் கே.கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.அழகர்சாமி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். வட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன், இணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், ராஜகுமாரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழக மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.380 வழங்குவது தொடர்பாக மின்துறை அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் கணேசன், மாதர் சங்க நிர்வாகி கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.