முகப்பு
பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 93 லட்சத்தில் உதவி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில், 199 பயனாளிகளுக்கு ரூ. 93.39 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில், 199 பயனாளிகளுக்கு ரூ. 93.39 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது: 
தமிழக அரசு கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வதுடன், அவற்றை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.  
இந்த முகாமில் பல்வேறு துறை மூலமாக 199 பயனாளிகளுக்கு ரூ. 93.39 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 169 மனுக்களில் தகுதியுடைய 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய விசாரணை செய்து நலத்திட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம், கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை, தாட்கோ, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 199 பயனாளிகளுக்கு ரூ. 93,39,289 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளித்தார் மாவட்ட ஆட்சியர் சாந்தா. 
முன்னதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நவீன முறை சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 
இதில் பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி வினோதா விளக்க உரையாற்றினார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் கதிரேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மனோகரன், வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →