புதுநடுவலூரில் மஹா கணபதி கோயில் குடமுழுக்கு விழா
பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூரில் மஹா கணபதி, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயில் குடமுழுக்கு விழா
பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூரில் மஹா கணபதி, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, 18 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு ஜந்துகரத்தான் வழிபாடு, புன்யாகம், யாக சாலை பிரவேசம் பூர்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் கணபதி வழிபாடு, சூர்யபூஜை, வேதபாராயணம், மூலமந்திர ஹோமம் ஆகிய சிறப்பு பூஜைகள், மாலை 5 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, சூர்யபூஜை, புன்யாகம், பிம்பசுத்தி மற்றும் தீபாராதனையும், 7.30 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீமஹா மாரியம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 9 முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கலசங்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீல்ராஜ், துணைத் தலைவர்கள் சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர்கள் பி. மணி, பி. பூபதி உள்பட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பொங்கல், மா விளக்கு பூஜை, சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.