பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலருமான அனில் மேஷராம், பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பளவு, பயிர் வகைகள், விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள், உரங்கள் இருப்பு, மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த அவர், அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும், குறித்த காலத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் சின்ன வெங்காயத்திலிருந்து ஊறுகாய், வெங்காயக் கூழ், உப்புக்கரைசலில் ஊறவைத்த வெங்காயம் உள்ளிட்ட மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.