குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க நிர்வாகி இரா. கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். த. பிரபி முன்னிலை வகித்தார்.
மாநில துணைச் செயலர் ஏ.வி. சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், குறவன் இன மக்களை பழங்குடியின பட்டியலில் (எஸ்.டி) இணைத்திட வேண்டும். குறவன் இன மக்கள் அனைவருக்கும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும். அனைத்து குறவன் இன இளைஞர்களுக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறவன் இன முதியோர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.