அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வீடு, வீடாகப் பிரசாரம்
பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, பள்ளி சிறுவர்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, பள்ளி சிறுவர்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்த அரசுப் பள்ளியில் 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத இப்பள்ளியில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதால் பள்ளியை மூடிவிடும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் ஒன்றிணைந்து மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தின் பிரதான இடங்களில் அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தங்களது சொந்த செலவில் விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளனர். மேலும், நாள்தோறும் மாலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க அந்த கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் கூறியது:
இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 10 மாணவர்கள் தான் உள்ளனர். நிகழாண்டு 2 மாணவர்களே 1 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். 5 மாணவர்கள் 5-ஆம் வகுப்பு படிக்கின்றனர். 5-ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வாகி வேறு பள்ளிக்கு சென்றுவிடுவார்கள். வரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு போனாலும் ஆச்சரியமில்லை. எனவே, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை வீடு, வீடாக அழைத்துச் சென்று பிரசாரம் செய்து வருகிறோம் என்றார் அவர்.