சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிப்பதோடு, கிராம ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை வாசிக்க வேண்டும்.
ஊராட்சித் தனி அலுவலர்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்து, கிராம மக்களின் தேவைகளைக் கேட்டறிய வேண்டும்.
அரசு நலத் திட்டங்களை வழங்கி, நிர்வாகத்தில் உள்ள குறைகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.
கூட்டத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதைக் கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பற்றாளர்களும், வட்டாரம் வாரியாக பார்வையிட மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழிவகுத்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.