பெரம்பலூர் அருகே, பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேரை பெரம்பலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, பெரம்பலூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீஸார் செஞ்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சசிகுமார் (44), என்பவரது வீட்டில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டருந்த பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த செல்வராஜ் (43), பரமசிவம் (45), முத்துசாமி (40), ராஜா (35), சதீஷ் (40), மகேந்திரன் (34), வசீகரன் (45), ராமசாமி (45), ராஜசேகர் (28), தனசேகர் (45), முத்துசாமி (38), உள்பட 14 பேரை கையும்களவுமாகப் பிடித்து வழக்குப் பதிந்த போலீஸார், பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 24 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.