வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 19 வீரர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 495 காளைகள் பங்கேற்றன. இந்தக் காளைகளை அடக்க திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், ஃபேன், ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 19 பேர் காயம்: ஜல்லிக்கட்டில் திருச்சி மாவட்டம், நடு இருங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் நவீன் வேளாங்கண்ணி (21) உள்ளிட்ட 19 வீரர்கள், பார்வையாளர்கள் 3 பேர் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதலுதவிஅளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த நவீன் வேளாங்கண்ணி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.