தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, விவசாயிகள் கைகளில் திருவோடு ஏந்தி, அரை நிர்வாணப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தார். போராட்டத்தில், பெரம்பலூர் மாவடட்த்தில் சாகுபடி செய்யப்பட்டு படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் விவசாயிகள் தங்களது கையில் திருவோடு, அரை நிர்வாணத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.