அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 369 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுக்களைப் பெற்றார். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து சிறுபான்மை நலத்துறை சார்பில் 7 பேருக்கு சலவைப்பெட்டிகளும், ஒருவருக்கு தையல் இயந்திரத்தையும் ஆட்சியர் வினய் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி,சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் த.முருகன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பெரம்பலூரில்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 293 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், நல்ல நிலையில் உள்ள நபரை திருமணம் செய்துகொள்ளும் திருமண நிதியுதவி
வழங்கும் திட்டத்தின் கீழ், 11 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகள், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,100 மதிப்புள்ள பார்வையற்றோருக்கான கைக்கடிகாரங்கள், மாவட்ட பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பேருக்கு தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை ஆட்சியர் சாந்தா வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.