தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுமார் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான போலீஸார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் மாரி மீனாள் பேச்சுவார்த்தை நடத்தி, 3 மாதத்தில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பாலக்கரை பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, செட்டிக்குளம், அம்மாபாளையம், குரும்பலூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அப்பள்ளிகளின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தந்த பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.