பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் வியாபாரி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகை செட்டிப்பட்டரை காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சக்திவேல் (45), வியாபாரி. இவர், திருச்சியில் இருந்து வாழைத்தார் வாங்கி லாரியில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். லாரியை, பாண்டிச்சேரி ஆனைமலை நகரைச் சேர்ந்த பலராமன் மகன் ஜீவானந்தம் (40) ஓட்டி வந்தார். இந்த லாரி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜயகோபாலபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், லாரியில் இருந்து கீழே விழுந்த சக்திவேல் உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் உடலை கைப்பற்றி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.