புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்த விளக்கக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: கமல், ரஜினி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் கிடையாது. எங்களது கட்சிக்கு பி டீமும் தேவையில்லை.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம். விவசாயிகளை போராட எதிர்க்கட்சிகள் தூண்டுகிறது. திமுக-வின் 2016 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், 24-ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது தான் வேளாண் சட்டமாக வந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயிகளை ஏமாற்ற திமுக முயற்சிக்கிறது.
வேளாண் சட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் நடத்தும் போராட்டம் மட்டுமல்ல, இனிமேல் எல்லாமே அவருக்குத் தோல்வி தான். புதிய வேளாண் சட்டத்துக்கு விவசாயிகளின் ஆதரவு உள்ளது. இச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து, அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதன்படி முடிவு எடுக்கப்படும்.
மாணவர்கள் நீட் தேர்வுக்காக, அகில இந்திய அளவில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களை தேர்வுக்காக ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல்வாதிகள் மாணவர்களிடையே மனம் மாற்றம் செய்யக்கூடாது என்றார் முருகன்.