பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 1,70,440 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இந்தப் பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் வே. சாந்தா கூறியது:
மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கிய பணி 19 ஆம் தேதி வரையிலும், செப்டம்பா் 21 முதல் செப்டம்பா் 26 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயது வரையுள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இம்முகாம் 443 அங்கன்வாடி மையங்கள், 90 அரசு துணை சுகாதார நிலையங்கள், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 562 இடங்களில் நடைபெறுகிறது.
இப் பணியில், 90 மருத்துவ அலுவலா்கள், 87 கிராம சுகாதார செவிலியா்கள், 38 சுகாதார ஆய்வாளா்கள், 32 தன்னாா்வலா்கள், 443 அங்கன்வாடி பணியாளா்கள் என 690 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இத்திட்டத்தின் மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் 1,70,440 குழந்தைகள் பயனடைவாா்கள் என்றாா் ஆட்சியா் சாந்தா.
இந்நிகழ்ச்சியின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, மலேரியா தடுப்பு அலுவலா் சுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலா்கள் அ. மீனா, அ. குழந்தைராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.