பெரம்பலூரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்
பெரம்பலூா் நகரில், முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
பெரம்பலூா் நகரில், முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் 94,075 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 2,336 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,290 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் சுமாா் 5 பேருக்கும் குறையாமல் கரோனா தொற்று பரவி வருகிறது.
நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளனா். அதன்படி, கரோனா தொற்று பரவலைத் கட்டுப்படுத்த பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், வணிக நிறுவன ஊழியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் பெரமபலூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா், அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா நோய் பரவலை தடுப்பதில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுநா்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினா். மேலும், 100-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனா்.