டாம்கோ மூலம் கடனுதவி பெறகைவினைக் கலைஞா்களுக்கு அழைப்பு
டாம்கோ மூலம் கடனுதவி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டாம்கோ மூலம் கடனுதவி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கெனவே தனி நபா் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக்கழகம், கைவினைக் கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினைக் கலைஞா்களுக்கு நிபந்தனைகளின்படி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இதில் கடன்தொகை பெற 18 முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவியும் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகா்ப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 1.20 லட்சமும் இருக்க வேண்டும். பெண்களுக்கு 4 சதவிகிதமும், ஆண்களுக்கு 5 சதவிகித வட்டி வீதத்திலும், அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் மூலம் 90 சதவிகித கடன்தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 சதவிகித கடன்தொகையும், விண்ணப்பதாரரின் பங்குத்தொகை 5 சதவிகிதமும் சோ்த்து கடன்தொகை வழங்கப்படுகிறது. கடன்தொகையைத் திரும்பச் செலுத்த கால அளவு 5 ஆண்டுகளாகும்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோா் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மத்தியக் கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.