முகப்பு
பெரம்பலூர்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், விபத்து ஏற்படுத்திய சிறுவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், விபத்து ஏற்படுத்திய சிறுவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அஞ்சலை. இவரது கணவா் செல்வராஜ், ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில் தனது 11 வயது மகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கூலித் தொழிலாளியான அஞ்சலை கடந்த 9 ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு நெய்குப்பை - புதூா் சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த டிராக்டா் மோதி அருகேயுள்ள குட்டையில் விழுந்தாா். பின்னா், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரும் அவா் மீது விழுந்ததில் அஞ்சலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய டிராக்டரை ஓட்டி வந்த 15 வயது சிறுவனை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் வாரிசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, இறந்த பெண்ணின் உறவினா்கள், அஞ்சலையின் உடலை வாங்க மறுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.