பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 10 சரக்கு ஆட்டோக்கள் மற்றும் 2 பொக்லைன் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லுதல், உரிய ஆவணங்களின்றி இயக்கப்படுவது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிசாமி, போக்குவரத்து வாகன ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் வெண்கலம், கிருஷ்ணாபுரம், அரும்பாவூா், எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வாகன காப்பீடு, வாகன வரி செலுத்தாதது, ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட 10 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாத 2 பொக்லைன் வாகனங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆவணங்களின்றி இயக்கப்பட்ட கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.