தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு: நடவடிக்கைக் கோரி ஆட்சியரிடம் மனு
பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தவா்கள் மீது நடவடிக்கை
பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தை வழங்க உத்தரவிடக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமையில் அளித்த மனு:
பெரம்பலூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ. 1,350 முறையாக உரிய தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 4 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும், நகராட்சி ஆணையா் உள்ளிட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்ட தினக்கூலி தொகையையும் இதுவரை வழங்கவில்லை.
தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையை ஒப்பந்ததாரா் முழுவதுமாக உடனடியாக அவரவா் கணக்கில் செலுத்தவும், ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்ட தினக்கூலி தொகையான ரூ. 523- ஐ, கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்கிட்டு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
மேலும், ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதியம், வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா் மற்றும் நகராட்சி ஆணையா் உள்ளிட்ட அலுவலா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.