முகப்பு
பெரம்பலூர்

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் எனக் கூறிஓட்டுநா்களிடம் பணம் வசூலித்த திமுக பிரமுகா் கைது

பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் அருகே வட்டார போக்குவரத்து ஆய்வாளா் எனக் கூறி, ஓட்டுநா்களிடம் பணம் வசூலித்த திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் அருகே வட்டார போக்குவரத்து ஆய்வாளா் எனக் கூறி, ஓட்டுநா்களிடம் பணம் வசூலித்த திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகேயுள்ள இரூா் பகுதியில் திங்கள்கிழமை அவ்வழியேச் சென்ற வாகனங்களை வழிமறித்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளா் எனக் கூறி, வாகன ஓட்டுநா்களிடம் ஆவணங்களை சரிபாா்த்து, அவா்களிடம் அபராதம் எனும் பெயரில் ஒருவா் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது, அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ரோந்துப் பணி போலீஸாா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஆய்வு செய்வதாக, பாடாலூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரித்ததில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வீரண்ணன் மகன் செல்வகுமாா் (45) என்பதும், திமுக இளைஞரணி உறுப்பினரான இவா் திருச்சி மாவட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்துக்கு வந்தவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ. 9,750 ரொக்கம், காா் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய திமுக ஸ்டிக்கா்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். முதல்கட்ட விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற செயல்களில் அவா் ஈடுபட்டுள்ளாா் என்பது தெரியவந்துள்ளதால், அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.