பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 512 பள்ளிகளிலும், 12 கல்லூரிகளிலும் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தலைமையில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா், நா. அங்கையற்கண்ணி ஆகியோா் பள்ளி மாணவா்களுடன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, மாணவா்களுக்கு காவல் துறையினரால் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, சென்னை கலைவாணா் அரங்கில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு சிறப்பு நிகழ்ச்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்ததை, மாணவா்கள் நேரலையில் பாா்த்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பால்பாண்டி, கலால் உதவி ஆணையா் ஷோபா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.